Sunday, May 18, 2014

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது மேட்டூர் அணையில் பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

மேட்டூர் அணையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டங்களை தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை இரவு நேரங்களில் சிலர் சூறையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மிகவும் பழமையான வரலாறு கொண்டது. இம்மாவட்டங்களில் தான் வரலாற்று காலத்திற்கு முந்தைய கற்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் அதிகம் கிடைக்கின்றன. முக்கியமாக கற் திட்டைகள், குத்துக்கற்கள், கற்பதுக்கைகள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரீகத்தின் நினைவுச் சின்னங்கள் அனைத்து ஒரே இடத்தில் கிடைக்கின்றது.

தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர்கள் சுகவனமுருகன், ராஜன், அர்ஜுனன் ஆகியோர் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மேட்டூர் அணையின் நீர்தேங்கும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது (தர்மபுரி மாவட்ட பகுதி) 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்திட்டைகளுடன் கூடிய கல்வட்டங்களும், கற்திட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

பாண்டவன் திட்டு என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்திட்டை மிகவும் பழமையானது ஆகும். தமிழகப் பெருங்கற்கால நினைவு சின்னங்களுள் குறிப்பிடத்தக்க இடத்தை பெறக்கூடிய ஒன்றாகும். இந்த கற்திட்டையின் மூடுகல் மட்டும் சுமார் 80 டன் எடை கொண்டதாக இருக்கும் என்பது இதன் பிரமாண்டத்தை காட்டுவதாகும். அதுமட்டுமல்லாமல் இக்கற்திட்டையின் இடுதுளை கிழக்கு பக்கம் உள்ளது. அரை வட்ட வடிவில் இருப்பது இதன் பழமையை காட்டுகிறது.

ஆய்வின் ஒரு பகுதியாக மலையனூர் திட்டு என்னுமிடத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த ஏராளமான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கல்வட்டத்தின் நடுவே ஈமப்பதுக்கை இருப்பதும் அறியப்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட ஒவ்வொரு பாறாங்கல்லும் ஒரு டன் எடையுள்ள கற்களால் இக்கல்வட்டம் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். இடுதுளை ஒன்று இருந்திருக்கும் என்று யூகம் செய்ய மட்டுமே முடிகிறது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் நீர் வற்றும் சமயங்களில் வெளியே தெரியும் நந்தியும், வீரபத்திரன் கோயிலும் சுமார் 800 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. சர்ச் கோபுரங்கள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானவை. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெருங்கற்கால நாகரீகத்தை சேர்ந்த இந்த ஈமச்சின்னங்கள் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

புதையல் வேட்டையாளர்களும், அரியபொருள் திருடர்களும், பேராசைக்காரர்களும் தங்களது அறியாமையால் இரவில் குழி தோண்டி இச்சின்னங்களை சூறையாடி வருகின்றனர். இவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற அரசு முன்வரவேண்டும் என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.